Friday 15 June 2018

36-வது தேசியக்குழு கூட்ட முடிவுகள்


நமது 36-வது தேசியக்குழு கூட்டம் (NJCM) 12-06-2018 அன்று டெல்லி., கார்ப்பரேட் அலுவலகத்தில் திருமதி. சுஜாதா ராய்., இயக்குனர் (மனிதவளம் மற்றும் நிதி) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொது மேலாளர் (SR - ஊழியர் உறவு) அவர்கள் தேசியக்குழு (ஊழியர் தரப்பு மற்றும் நிர்வாகத் தரப்பு) உறுப்பினர்களை வரவேற்று தனது உரையில் தற்போது உள்ள  நெருக்கடியான காலகட்டத்தில் நாம் உணர்வு பூர்வமாக ஒன்றிணைந்துள்ளோம் எனவும் தேசியக்குழு என்பது நமக்கான பிரச்சனைகளை இணைந்து பேசி சுமூகமாக தீர்ப்பதற்கான ஒரு களம் என்றார்.

தேசியக்குழுவின் தலைவர் திருமதி. சுஜாதா ராய் அவர்கள் அனைவரையும் வரவேற்று தனது உரையில் தேசியக்குழு கூட்டத்தை குறிப்பிட்ட கால அட்டவணை அடிப்படையில் நடத்த முடியாதமைக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்தார். இந்த இரண்டு வருட காலங்களில் இரண்டு கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். தற்போதைய சூழ்நிலையில் நமது BSNL நிறுவனத்தால் தொழிலாளர்களுக்கு ஆதரவாக., ஒரு முன்மாதிரி நிறுவனமாக செயல்படுவதற்கு கடினமாக உள்ளது. நமது வருமானம் குறைந்து வருவது பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் நிர்வாகமும்., ஊழியர்களும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கவேண்டும். தொழிலாளர்கள் உணர்வு பூர்வமானவர்கள். கடந்த ஆண்டு நமது வருமானம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால் ஊழியர்கள் தங்கள் விருப்பத்தை., ஆர்வத்தை கைவிட வேண்டியிருந்தது. 3-வது ஊதிய மாற்றத்தை உறுதியாக பெற்றுத் தருவோம் என்றும்., Affordability பிரிவிலிருந்து விலக்கு பெறுவதற்கான அமைச்சரவைக் குறிப்பை தயாரிப்பதில் DOT முனைப்பாக உள்ளது என்றும்., ஊதிய மாற்றம் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்துவிடும் என தான் நம்புவதாகவும்., BSNL நிறுவனத்தின் வருமானம் குறையாமல் இருக்க வேண்டும் எனவும் கூறினார். அனைவரின் ஒத்துழைப்பினால் டவர் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தாலும் அதன் நன்மை., தீமைகளை தளர்த்த முடியாது என்றார்.

தேசியக்குழுவின் ஊழியர் தரப்பு தலைவர் தோழர். சந்தேஷ்வர் சிங் அனைவரையும் வரவேற்று தனது உரையில் BSNL ஊழியர்களுக்கு புதிய GSM Prepaid மொபைல் திட்டத்தை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு., 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கேசுவல் ஊழியர்களின் ஊதிய உயர்வு., ஊழியர்களுக்கு புதிய மொபைல் திட்டத்தை அமுல்படுத்துவதில் கார்ப்பரேட் அலுவலகம் எதிர்கொண்ட சிரமங்கள் மற்றும் அனுபவங்கள்., கருணை அடிப்படையிலான பணி வழங்குவதில் ஊழியர்களின் மனைவிக்கு வழங்கிய 15 புள்ளிகள் மதிப்பெண்களை ஊழியர்களின் குடும்பத்தாருக்கும் நீட்டிக்க வேண்டும்., முதுநிலை கணக்காளர்களை அதிகாரிகளாக தரம் உயர்த்துவது., டெலிகாம் டெக்னீசியன் (TT)  கேடருக்கு வெளியிலிருந்து ஆளெடுப்பது., TT, JE, JAO மற்றும் JTO கேடர்களுக்கு போட்டித்தேர்விற்கான கால அட்டவணையை வெளியிடுவது ஆகிய கோரிக்கைகள் குறித்து விவாதித்தார்.

தேசியக்குழுவின் ஊழியர் தரப்பு செயலர் தோழர். அபிமன்யூ தனது உரையில் புதிய மொபைல் திட்டத்திற்கு தனது நன்றியை தெரிவித்ததுடன்., தேசியக்குழு முடிவுகள் அமுலாக்கப்படாமல் இருப்பது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். நிர்வாகமும்., ஊழியர் தரப்பும் இணைந்து டவர் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்துவதற்கு எந்தவிதமான முடிவுகளை எடுக்கவும்., நடவடிக்கைகளில் இறங்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றும்., ஊதிய மாற்றத்திற்கான அமைச்சரவைக் குறிப்பு தயாராவதில் நிகழும் காலதாமதம் குறித்தும்., கேசுவல் ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய 5% சதவீத ஓய்வூதியப் பலன்கள் குறித்தும்., கேசுவல் ஊழியர்களின் ஊதியம்., ஓய்வூதியப் பலன்கள் அதிகரிக்கப் படவேண்டும் என்றும்., ஓய்வூதியர்களின் மருத்துவ வசதிக்கான முறையான உத்திரவு வெளியிடப்பட வேண்டும் என்றும்., தேசியக்குழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெற வேண்டும். நிலைக்குழுவின் கூட்டம் இரண்டு ஆண்டுகளில் ஒருமுறை தான் நடத்தப்பட்டுள்ளது. சந்தைப்படுத்துதல் (Marketing) பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவாதித்தார்.

தேசியக்குழுவின் ஊழியர் தரப்பு உறுப்பினர் தோழர். இஸ்லாம் அகமது தனது உரையில் BSNL நிறுவனம் பெரும் நிதிநெருக்கடியில் இருக்கும் போது BSNL இயக்குனர் குழுக்கூட்டத்தை ஹைதராபாத்தில்., ஐந்து நட்சத்திர விடுதியில் நடத்துவது நிறுவனத்திற்கு நல்லதல்ல என்பதை சுட்டிக்காட்டினார். JAO கேடருக்கான ஆளெடுப்பு விதிகளை இறுதி செய்தல்., புதிய பதவி உயர்வுத் திட்டத்தை உருவாக்குதல்., NEPP பதவி உயர்வு திட்டத்தில் உள்ள பாதகங்களை களைதல்., கால காப்புறுதி திட்டத்தை (Term Insurance Scheme) ஊழியர்களுக்கும் நீட்டித்தல் ஆகிய கோரிக்கைகள் குறித்து விவாதித்தார்.

தேசியக்குழுவில் விவாதிக்கப்பட்ட ஆய்படு பொருள்கள்:
  • JE LICE இலாக்கா போட்டித் தேர்விற்கு கூடுதல் மதிப்பெண் மற்றும் தளர்வு வழங்குவது தொர்பாக: இப் பிரச்சனை தேசியக்குழுவில் விரிவாக விவாதிக்கப்பட்டது. சாதகமான முறையில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்., அடுத்த JE இலாக்கா போட்டித் தேர்வு கூடிய விரைவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
  • RTP-களை நிரந்தரப்படுத்து: BSNL-க்கு இதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட வில்லை. இப் பிரச்சனை தொலைத்தொடர்பு (DOT) துறைக்கு பரிந்துரை செய்யப்படும்.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம், NE - I மற்றும் NE - II பகுதிகளுக்கு SOA கேடருக்கு சிறப்பு ஆளெடுப்பு: BSNL நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட SOA ஊழியர்களின் எண்ணிக்கை. 26368 இதற்கு இணையாக பணிபுரியும் SOA ஊழியர்களின் எண்ணிக்கை. 26323-ஆக உள்ளது.
  • JE LICE இலாக்கா போட்டித் தேர்வை Off Line-ல் நடத்துவது தொடர்பாக: ஊழியர்களுக்கு (குரூப் C மற்றும் D) கணினி பயிற்சி அளிக்கப்படும்.
  • இரசீது இல்லாமல் பெற்று வரும் மருத்துவத் திட்டத்தை ஆரம்ப 6 மாத காலத்தை தொடர்ந்து நீட்டிப்பது தொடர்பாக: இயக்குனர் (மனிதவளம்) இதற்கான உத்திரவு வழங்குவதற்கு உத்திரவிட்டுள்ளார்.
  • IQ பராமரித்தல் மற்றும் IQ-வை Online (இணையத்தில்)-ல் பதிவு செய்வதற்கான முறையை உருவாக்குதல் தொடர்பாக: ITPC நிறுவனத்திடம் IQ-வை Online (இணையத்தில்)-ல் பதிவு செய்வதற்கான புதிய மென்பொருள் தளத்தை உருவாக்கிட விவாதித்துள்ளோம்.  பராமரிக்கப்படாமல் உள்ள IQ-க்களை உடனடியாக பராமரித்திட அறிவுறுத்தப்படும்.
  • கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும் புள்ளிகள் மற்றும் மதிப்பெண் முறையை மாற்றுவது தொடர்பாக: காலி இடங்களை நிரப்புவதற்கு உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. 02-06-2016 அன்று வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல் படி காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இந்த உத்திரவு 01-04-2018 முதல் அமுல்படுத்தப் படும்.
  • மனிதவளம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து (HR Issues) தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஒப்புதல் அளித்தும் செயல்படுத்தப்படாமல் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக: 1) ஊழியர்களுக்கு (Non-Executives) பதவி உயர்வின் அடிப்படையில் E-1 Pay Scale வழங்கப்பட வேண்டும். 2) விடுபட்டு போன ஊழியர்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத் தொகை வழங்கப்பட வேண்டும் (01-01-2017-க்கு பிறகு பணி நியமனம் பெற்ற JE ஊழியர்களுக்கு இணையாக) 3) கேசுவல் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட வேண்டும். இப் பிரச்சனைகள் குறித்து தேசியக்குழுவின் தலைவர் மற்றும் இயக்குனர் (மனிதவளம்) அவர்கள் தற்போதைய மாற்று சூழ்நிலைக்கு ஏற்றவாறு சாதகமாக பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட போது எழுந்த பிரச்சனைகள் தீர்க்கப்படுவது தொடர்பாக: Soft Tenure-க்கு இரண்டு ஆண்டுகள் காலம் என்ற ஊழியர் தரப்பின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். பொது மேலாளர் (SR) அவர்கள் பிரச்சனைகளின் பகுதியான ஹைதராபாத் மற்றும் விஜயவாடா பார்வைக்கு பிறகு சங்கங்களோடு கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
  • அசாம், NE - I மற்றும் NE - II மாநிலங்களை மையப்படுத்தி கவுகாத்தியில் BSNL தனி சேவையகம் (BSNL Separate Server) அமைப்பது தொடர்பாக: தற்போது அமைக்கப்பட்டுள்ள வலைஅமைப்பு (Net  Work)-ல் முன்னேற்றம் வரும் என்று எதிர் பார்க்கின்றோம்.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரியும் கேசுவல் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் விஸ்தரிப்பது தொடர்பாக: சிறப்பு சலுகைகள் மற்றும் ஊக்கத் தொகை வழங்குவதற்கு எந்தவிதமான உத்திரவும் வெளியிடப்படவில்லை.
  • BSNL CDA விதி 2006-ல் விதி 55(A) இணைப்பது தொடர்பாக: மேல்முறையீட்டு ஏற்பாடுகள் செய்யப்படும். SSA-க்கு பதிலாக மாநில மட்டத்தில் குழுவை உருவாக்குவதற்கான கோரிக்கை ஆய்வு செய்யப்படும். DOT-ல் இருந்து BSNL-க்கு மாற்றப்பட்ட ஊழியர்களுக்கு FR (J) விதி பொருந்தாது எனவே இவ் விதியை பயன்படுத்த முடியாது என்று ஊழியர் தரப்பால் வலியுறுத்தப்பட்டது.
  • JTO Officiating ஊழியர்களுக்கு FR 22 (I) a (I) வழங்குவது தொடர்பாக: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  • பொது மேலாளர் அலுவலகங்கள் மற்றும் தொலைத்தொடர்பு மாநில அலுவலகங்களில் AM பதவிகள் உருவாக்குவது தொடர்பாக: ஊழியர் தரப்பு Sr.TOA (SOA)-க்களுக்கு AM பதவிகள் உருவாக்குவதற்கான கோரிக்கை வைத்துள்ளது. இக் கோரிக்கை கருத்தில் கொண்டு சாதகமாக பரிசீலிக்கப்படும்.
  • மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தனிச் சலுகைகள் வழங்குவது தொடர்பாக: மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உத்திரவு எண்: 6-1/2007-Restg Vol-III dt 24-11-2014. DOPT-ன் உத்திரவு அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
  • ஒழுங்கு நடவடிக்கைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளவர்களுக்கு CR  விண்ணப்பம் பூர்த்தி செய்வது தொடர்பாக: a) CR விண்ணப்பத்தில் பூர்த்தி செய்வதற்கு APP-9 மற்றும் APP-10 காலம் குறிப்பிடப்பட வில்லை. b) தண்டனைக்கு பிறகு பதவி உயர்வு: உத்திரவு எண்: DOP&T OM No-22011/4/2007-Estt(O) dt 28-04-2014 அடிப்படையில் செயல்படும். c) இடைநீக்கம் (Suspended) செய்யப்பட்ட காலத்தில் மருத்துவ சிகிச்சை: CCS/CCA மற்றும் CDA விதிகளில் ஒரேவிதமான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. இது சமரசம் செய்யப்பட வேண்டும்.
  • LTC வசதியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக: BSNL நிறுவனத்தின் நிதிநிலை முன்னேற்றத்திற்கு பிறகு பரிசீலிக்கப்படும்.
  • ஓய்வூதியம் (பென்சன்): a) DOT-ல் இருந்து BSNL-க்கு மாற்றப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம் புதுப்பிப்பது தொடர்பாக: இக் கோரிக்கை DOT-யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். b) மாற்றுத்திறனாளி ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத் திருத்தும் செய்வது தொடர்பாக: IDA ஓய்வூதிய திருத்தும் செய்யப்பட்ட பிறகு எடுத்துக் கொள்ளப்படும். c) விவாகரத்தான மகளுக்கு (Divorced Daughter) ஓய்வூதியத் தகுதி: தனிப்பட்ட வழக்குகள் இருந்தால் தெரிவிக்கவும். d) பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே PPO வழங்குவது தொடர்பாக: பணி ஓய்விற்கான விண்ணப்பங்களை பணி ஓய்வு பெறுவதற்கு 6 மாத காலத்திற்கு முன்பாகவே பூர்த்தி செய்து ஊழியர்களுடைய சேவைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • பல்பணி தன்மை கொண்ட ஊழியர்களை (Multitasking Staff) உருவாக்குவது தொடர்பாக: இக் கோரிக்கை மற்ற அமைச்சகங்களின் ஒப்புமைக்கு உட்பட்டது. விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
  • எதிர்மறை மதிப்பெண்கள் (Negative Marks) முறையை தவிர்த்தல் தொடர்பாக: இக் கோரிக்கையை நிர்வாகத்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. ஊழியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படும்.
  • Sr.TOA (G) கேடருக்கு Screening Test மூலம் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக: வழிகாட்டுதல் வழங்கப்படும்.
  • Confirmation Examination நடத்துவது தொடர்பாக: சிறப்புத்தேர்வு கூடிய விரைவில் நடைபெறும்.
  • 01-01-2007 முதல் MTNL-க்கு இணையான ஊதியம் வழங்குவது தொடர்பாக: இக் கோரிக்கைக்காக கூடிய விரைவில் கூட்டுக்குழு அமைக்கப்படும்.
  • அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இலவச சேவை சிம் இணைப்பு வழங்குவது தொடர்பாக: இக் கோரிக்கையை ஆய்வு செய்து எந்தவித பாகுபாடும் இல்லாமல் சாதகமாக பரிசீலிக்கப்படும்.

No comments:

Post a Comment